குளச்சல், ஏப். 6 –
நாகர்கோவில் அருகே அனந்த நாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (27). கூலி தொழிலாளி. இவரது மனைவிக்கும் வெள்ள மோடி பகுதியை சேர்ந்த லிங்கேஷ் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த ஜெகன் தனது மனைவியையும் லிங்கேஷையும் கண்டித்துள்ளார். இதனால் ஜெகன் மீது லிங்கேஷுக்கு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் லிங்கேஷ், ஜெகனை அழைத்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு வெள்ளமோடிக்கு அழைத்துள்ளார். இதனால் ஜெகன் ராமன் புதூரை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உடன் வெள்ளமோடிக்கு சென்றார். அப்போது அங்கு நடந்த பேச்சுவார்த்தையின் போது வாய் தகராறு வேறுபட்டு, ஆத்திரமடைந்த லிங்கேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகனை குத்தினார். இதை தடுக்க சென்ற ராஜகுமாருக்கும் கத்தி குத்து விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஜெகன் மற்றும் ராஜகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் லிங்கேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


