தென்தாமரைகுளம், பிப். 24 –
அய்யா வைகுண்டசாமியின் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு முன்னாள் மாநில திமுக நிர்வாகியும் தலைமைபதி நிர்வாகியுமான வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் பொதுவாழ்வில் இருந்து விலகி வழிபாடு தொடர்பான செயல்பாட்டை மட்டுமே கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தபோது முதல்வர் அழைத்ததாக அப்போதைய மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன், ஒன்றிய செயலாளர் தாமரை பாரதி ஆகியோர் அழைத்தனர். அதன் அடிப்படையில் சில கோரிக்கைகள் உண்டு. அதை நிறைவேற்றி தந்தால் நான் திமுகவில் இணைகிறேன் என்று சொல்லி அது குறித்து தளபதியிடம் பேசி என்னை அழைத்து சென்றார்கள்.
நான் அறிவாலயத்தில் சந்தித்தபோது என்னை கட்டிப்பிடித்து நெற்றியில் கைவைத்து இந்த நாமம் என்னோடு வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். நான் சிலவற்றை சொல்ல முற்பட்டபோது அவர் பல வாக்குறுதிகளை தந்தார். என்னைப் பொருத்தவரையில் அது உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன். ஆனால் இன்றைய திராவிட இயக்கத்தின் கொள்கைகளை 194 ஆண்டுகளுக்கு முன்னதாக அய்யா உலகத்திற்கு எடுத்துச் சொல்லி சமத்துவம், சாதிநிரப்பு ஆகிய கொள்கைகளை ஒரு தனி வழிபாடாக உருவாக்கி கோடிக்கணக்கான மக்கள் வைகுண்டரை வழிபடும் இறைவனாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
திராவிட இயக்கங்களுக்கு முன்னதாக திராவிட சிந்தனைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல அய்யா வைகுண்டரின் அவதார நாளுக்கு அரசு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்பதையும், ஏற்கனவே கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறையும், தமிழகம் முழுவதும் வரையறுக்கப்பட்ட விடுமுறையும் அமுலில் உள்ளது. எனவே பொது விடுமுறை தர வேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
அதன் பிறகு அய்யா வைகுண்டர் வழிபாட்டிற்கு தனி அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் வைத்தேன். நான் இயக்கத்தில் அவருடைய அழைப்பை ஏற்று இணைந்த பிறகு நாடாளுமன்ற தேர்தலில் அதற்கு பின்னால் வந்த சட்டமன்ற தேர்தலிலும் கழகத்தின் வெற்றிக்காகவும் பாடுபட்டிருக்கிறேன். அய்யா வழியின் ஆதரவையும் பெற்று கொடுத்துள்ளேன். ஐந்து ஆண்டுகள் நிறைவு பெறுகிற இந்த நேரத்தில் என்னுடைய நியாயமான வேண்டுதல் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தலைவர் தளபதியார் நிறைவேற்றப்படவில்லை என்பதை இன்று குமரி மாவட்டம் வருகின்ற முதல்வரின் பார்வைக்கு நான் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
முதல்வர் மார்ச் 4ஆம் தேதி (மாசி 20) அவதார திருநாளுக்கு அய்யாவழி அன்பர்களின் இதயம் மகிழும் வகையில் தமிழகம் முழுவதும் விடுமுறை வழங்கி யோகோபித்தக் அயாவழியினரின் நன்றியை பெற்றுக் கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



