சுசீந்திரம், செப். 9 –
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூரைச் சார்ந்தவர் ஞானமணி (53). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நல்ல குடிப்பழக்கம் உடையவர் என தெரிகிறது. சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி ஞான பிரஸ்சில்லா (46) தினந்தோறும் குடித்துவிட்டு வருகிறீர்களே வீட்டு செலவிற்கு பணமும் கொடுப்பதில்லையே என கேட்டுள்ளார்.
இதனால் கோபித்துக் கொண்ட ஞானமணி நான் இல்லாமல் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதை பார்த்து விடுகிறேன் என கூறி சென்றவர் ஏதோ பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி உள்ளார். பின்பு அவரது மனைவியிடம் நான் தெரியாமல் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டேன் எனக் கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று ஞானமணி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


