சேலம், செப். 7:
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அதிக அளவில் உதவித்தொகை வழங்கப்படும் நிலையில், தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, 100 நாள் வேலை பாதிப்பு, ரேஷன் அரிசி குறைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்துவோம் என தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டும், பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகவில்லை என அவர்கள் தெரிவித்தனர். உதவித்தொகையை உடனடியாக உயர்த்தி வழங்கக் கோரி தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.



