நாகர்கோவில், ஜூலை 7 –
தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க பி.டி.செல்வகுமார் கோரிக்கை
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளில் வசிக்கும் ஏழை மக்கள் தங்கள் வசதிக்கேற்ப மனைகளை பிரித்து வாங்கி, வீடு கட்டி வந்தார்கள். ஆனால் கடந்த ஆட்சியில் ஒரு சட்டத்தை கொண்டு வந்ததால் எந்த ஒரு சொத்துக்களையும் தனது வாரிசுகளுக்கு பிரிக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
மேலும் நில அளவு செய்பவர்கள், எழுத்தர்கள், புரோக்கர்கள் போன்ற பலர் வேலை இழந்து நிற்கின்றனர். இதனால் கட்டுமான தொழிலும், தொழிலாளர்களும் வேலை இழந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கு பத்திரப்பதிவு நடப்பதில் பிரச்சினை இருப்பதால் தமிழக அரசுக்கு பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம். எல்.ஏக்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி இந்த பிரச்சினையில் சார்பதிவாளர்கள், இடைத்தரகர்கள் பணம் வாங்குவதையும் தடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது கேரளத்துடன் இருந்து பிரிந்து வந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பத்திரப்பதிவுகள் செய்ய நிபந்தனைகள் விதிக்க கூடாது என்று அரசாணை விடுத்திருந்தார். ஆனால் இன்று சொத்துக்களை விற்க முடியாமல், வாங்க முடியாமலும், பாதைகள் போடமுடியாமலும் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர்.
அரசின் வருவாயில் பெரும் பங்கு வகிக்கும் பத்திரப்பதிவு துறையில் நீண்ட காலமாக இருந்து வரும் பிரச்சினையில் முதல்-அமைச்சர் தலையிட்டு ஏழை, எளிய மக்கள் சொத்துகளை வாங்கி விற்கும் நடைமுறையை எளிமைப்படுத்தவும், இதன் மூலம் தமிழக அரசுக்கு வருமானம் பெருகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



