தஞ்சாவூர், மார்ச் 30 –
தஞ்சாவூரில் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்களின் பண்டிகைகளுள் முக்கியமான பண்டிகை ஆகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த ஈஸ்டர் பெருவிழாவிற்கு முன் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர். இந்த 40 நாட்கள் தவகாலம் சாம்பல் புதனுடன் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்த நாளில் கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று ஆலயங்களில் வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. அதன்படி தஞ்சாவூர் மறைமாவட்டத்தின் தலைமை பீடமாக விளங்கும் திரு இருதய பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
முன்னதாக புனித வியாகுலமாதா ஆலய முகப்பில் மறைமாவட்ட விவிலிய பணிக்குழு செயலாளர் பால்ராஜ் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் டி.சகாயராஜ் தலைமையில் குருத்தோலைகள் புனிதம் செய்யப்பட்டு, குருத்தோலை பவனி நடந்தது.
இந்த பவனியானது கல்லுக்குளம் ரோடு, பூக்கார வீர வாண்டையார் தெரு, மேரீஸ் கார்னர், நாஞ்சிக் கோட்டை சாலை வழியாக திரு இருதய பேராலயம் வந்தடைந்தது. இந்த பேராலய பங்குதந்தை பிரபாகர், உதவி பங்குதந்தையர்கள் அரவிந்த், ஜெனித் லாரன்ஸ், ஆயரின் செயலாளர் ஷெரில் கியூபர்ட், தஞ்சாவூர் பல்நோக்கு சமூக சேவை சங்கத்தின் இயக்குனர் ஆர்.கே. அடிகள் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி சென்றனர்.
இதே போல் தஞ்சாவூர் சிவகெங்கை பூங்கா கோட்டை சி.எஸ்.ஐ கிறிஸ்துநாதர் ஆலயம், தஞ்சாவூர் குழந்தை இயேசு ஆலயம், தஞ்சை சின்னையாபாளையம் ரோட்டில் உள்ள ஐ.இ.எல்.சி வளாகம் மற்றும் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.



