நாகர்கோவில், ஏப். 03 –
நாகர்கோவில் மாநகர் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் இறுதியில் வருகின்ற புனித வெள்ளியன்று அனைவருக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 5வது ஆண்டு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
இதுகுறித்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதி இளைஞர்கள் தெரிவிக்கையில்: புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் உயிர்நீத்த தியாகத்தை இந்த நாள் உணர்த்துகிறது. இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை இயேசு அனுபவித்த துன்பங்கள் அவரது வாழ்வின் இறுதிக் கட்டத்தை மையமாகக் கொண்டு நிகழும் இவ்விழா புனித வெள்ளி என்று அழைக்கப்படுகிறது.
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கிறிஸ்தவர்கள் இந்நாளில் கருப்பு உடை அணிந்து, தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு ஆராதனைகளில் பங்கேற்று, இயேசுவின் பாடுகளை தியானிக்கின்றனர். இது இயேசுவின் மரணத்தின் மீதான துயரத்தை மட்டும் குறிக்காமல், அவர் மனிதகுலத்திற்காக செய்த தியாகத்தின் “நன்மை”யை மையமாகக் கொண்டதால், ‘நல்ல வெள்ளி’ என்று அழைக்கப்படுகிறது.
புனித வெள்ளி இயேசுவின் மரணத்தை மட்டுமல்லாமல், அவரது அளவற்ற அன்பையும், பாவத்திலிருந்து மீட்பையும் குறிக்கிறது. எனவே உலக ரட்சகரின் பாடு, மரணம், உயிர்த்தெழுதல் மூலம் நாம் இரட்சிப்பை பெற்றுக் கொண்டோம். இந்நாளில் தேவாலய பிரார்த்தனை இறுதியில் கஞ்சி வழங்கி இந்நாளில் சிறப்பிப்பது போல் இப்பகுதி இளைஞர்கள் மற்றும் வணிகர்கள், இணைந்து இப்பகுதியில் வைத்து மாபெரும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியினை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக செய்து வருகிறோம் தற்போது ஐந்தாவது ஆண்டாக வழங்குகிறோம் என தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள், உள்ளூர், வெளியூரை சேர்ந்த ஏராளமானோர், அவ்வழியாக கடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போன்றவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து அமர்ந்து கஞ்சி அருந்தியும், பாத்திரங்களை கொண்டு வந்து தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் கஞ்சி வாங்கி சென்றனர்.
மேலும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள், வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள், கடை உரிமையாளர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள், இவர்களின் நண்பர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.



