மதுரை, ஜூலை 6 –
மதுரையில் நாளுக்கு நாள் போஸ்டர் மற்றும் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில் போஸ்டர் ஒட்டுவதற்கு ஒரு சில தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறனர், மேலும் மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் நகரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களை கிழித்தும் வருகின்றனர். மேலும் இந்த போஸ்டர் ஒட்டும் தொழிலில் பெரும்பாலான தொழிலாளர்கள் இதனை வாழ்வாதரமாக நம்பி உள்ளனர்.
எனவே மதுரையில் போஸ்டர் ஓட்டும் தொழிலை முறைப்படுத்த புதிய வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இதுபோல் மாநிலம் முழுவதும் வழிகாட்டி நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். போஸ்டர் ஓட்டும் தொழிலாளர்களை வாழ விட வேண்டும். பணி நேர விபத்துகளுக்கான அரசு காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். தேவையற்ற காவல்துறை நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு விளம்பர பணியாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்பட வேண்டும். இரவு நேர பணிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பிரதிபலிப்பு ஜாக்கெட் வழங்கப்பட வேண்டும். சட்டபூர்வமாக போஸ்டர் ஒட்டும் நடைமுறைகள் குறித்து அரசு பயிற்சி அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் சங்கம் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சங்கத் தலைவர் போஸ்டர் முத்துச்சாமி தலைமை வகித்தார். ரைட்சுரேஷ், பாலமுருகன், கலைச்சந்திரன், சுல்தான், நாகூர் மீரான், பாலாஜி, செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்துக்கண்ணன், ஸ்ரீதர், கணேசன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன் குமார் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் அண்ணாதுரை, கருப்பு ரவி உட்பட போஸ்டர் ஒட்டும் தொழிலாளர்கள், தமிழ்நாடு விளம்பர பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.



