மார்த்தாண்டம், ஏப். 6 –
பேச்சிப்பாறை அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் மகன் அபி (23). 10ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் கேரள மாநிலத்தில் தேன் பெட்டி தொழில் செய்து வருகிறார். தற்போது ஈஸ்டர் விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துள்ளார். ஆனால் அவர் யாரிடமும் பேசாமல் மௌனமாக இருந்து வந்துள்ளார்.
விசாரித்த போது, அபி, அந்த பகுதியில் உள்ள இளம் பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலி திடீரென பேசியதை நிறுத்தியதால் மனம் சோர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவில் 12 மணிக்கு வீட்டுக்கு வந்த அபி, தனக்கு சாப்பாடு வேண்டாம் என்று கூறிவிட்டு தனது படுக்கை அறைக்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டில் இருந்தவர்கள் அவரது அறையில் சென்று அழைத்த போது எந்த சத்தம் இல்லாமல் இருந்துள்ளது. தொடர்ந்து அரைக்கதவை திறந்து பார்த்த போது அபி தூக்கிட்டு தொங்கி, இறந்த நிலையில் காணப்பட்டார்.
உடனடியாக பெற்றோர் பேச்சிப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



