கோவை, ஜூலை 6 –
சமூகப் பொறுப்புணர்வு, ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தும் வகையில், கோவை நேரு விளையாட்டு வளாகத்தில் “போதைப்பொருளுக்கு எதிராக ஓடுவோம்” என்ற கருப்பொருளில் மாபெரும் மினி மாரத்தான் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. ஆரோக்கியமான, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், 60 பள்ளிகளைச் சேர்ந்த 1,300 மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மாரத்தான் போட்டி 12, 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என நான்கு வயது பிரிவுகளிலும், ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக நடத்தப்பட்டது. மாணவர்கள் “போதைப்பொருளுக்கு இல்லை” என்ற முழக்கத்துடன் பதாகைகளை ஏந்தி, ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் உற்சாகமாக ஓடி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வலுவான செய்தியை பொதுமக்களிடம் கொண்டு சென்றனர்.
இந்த நிகழ்வை கோவை மாநகர காவல்துறையின் துணை ஆணையர் ஆர் கோகுலகிருஷ்ணன் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், “போதைப்பொருள் ஒருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல,ஒரு குடும்பத்தையே சீரழிக்கிறது. இன்று நம் குழந்தைகள் உடல்நலத்திற்காக ஓடினால், நாளை அவர்கள் போதைப்பொருளை நோக்கி ஓடமாட்டார்கள்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக VGM ஹாஸ்பிடல் இயக்குநர் சுமன் கலந்து கொண்டார்.
மேலும் சகோதயா பள்ளியின் தலைவர் நவமணி,துணைத் தலைவர் டாக்டர் ஞானபாண்டிதன், பொதுச் செயலாளர் அரசு பெரியசாமி, இணைச் செயலாளர் டாக்டர் சாம்சன் செல்லதுரை, துணை செயலாளர் டாக்டர் அபிஷேக் பால் ஜாக்சன், சந்திரன் ஆகியோருடன், குழு உறுப்பினர்களான பிரேமா, சார்லின் மதிசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.



