குளச்சல், ஏப். 6 –
குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ஷோபன் மகன் ராகுல் (20). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய மினிஸ்டன் (20). இவர்கள் நண்பர்கள். இவர்கள் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு மது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக குளச்சல் பயணியர் விடுதி சந்திப்பு அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்திருந்தனர்.
இதை அடுத்து இரவு ராகுல் அவரது தம்பி சோகித் (18), ஆரோக்கிய மினிஸ்டன், அபிஷேக் (20), அபித் (21), ஸ்டாலின் (19), அனி (22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேர் மது பார்ட்டியில் கலந்து கொண்டனர். நள்ளிரவு அவர்கள் போதையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ராகுல் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு ஓட்டுநர் விஷாலை குறித்து அபிஷேக் தப்பாக பேசி உள்ளார். இதனால் அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஆரோக்கிய மினிஸ்டன் சோகித்தை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் அவர்களுக்குள் மாறி மாறி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அபிஷேக் பீர் பாட்டிலை உடைத்து சோகித்தை குத்துவதற்கு பாய்ந்து உள்ளார். இதிலிருந்து தற்போது ஒருக்காக சோகித் போதையில் தரைத்தளம் என நினைத்து ஜன்னலை திறந்து வெளியேற முயற்சித்துக் குதித்துள்ளார்.
இதனால் 60 அடி பள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். அவரை தொடர்ந்து ஆரோக்கிய மினிஸ்டனும் பின்தொடர்ந்து ஜன்னல் வழியாக குதித்துள்ளார். நள்ளிரவு ஆனதால் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்தனர். இதை யாரும் கவனிக்கவில்லை. மறுநாள் காலை குளச்சல் போலீசர் தகவல் அறிந்து ஆரோக்கிய மினிஸ்டன், சோபித் ஆகிய இரண்டு பேரை மீட்டு நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அபித், ஸ்டாலின் ஏனோஸ், அனீஸ் மற்றும் 17 வயது சிறுவன் என 4பேரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


