திருச்சி, ஜூலை 23 –
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயரிய நிர்வாக அமைப்புகளில் ஒன்றான ஆட்சிப் பேரவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், 8 மாவட்டங்களைச் சேர்ந்த 16 பேர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் வாக்களித்து செனட் உறுப்பினர்களைத் தேர்வு செய்வது வழக்கம். இந்த ஆண்டு கடைசி நேரத்தில் 2 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, மீதமிருந்த 16 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (Vice-Chancellor) தலைமையின் கீழ் செயல்படும் இக்குழுவினர், பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டங்களை (Curriculum) ஆய்வு செய்து பட்டப்படிப்புகளுக்கு அனுமதி வழங்குதல். தகுதியான மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் (Ph.D.) பட்டங்கள் மற்றும் கௌரவப் பட்டங்களை (Honorary Degrees) வழங்க ஒப்புதல் அளித்தல், தேர்வுகள் நடத்துதல், மாணவர் சேர்க்கை மற்றும் மாணவர் ஒழுக்க நடவடிக்கைகள் போன்றவற்றுக்கான விதிகளை உருவாக்குதல், பல்கலைக்கழகத்தின் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இந்த அமைப்பின் உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியுள்ளவர்களில் ஒருவரான, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுகுமாரன் இதுகுறித்து பேசுகையில்; “மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல், ஆசிரியர்களின் நலன், பல்கலைக்கழக வளர்ச்சி, ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை செனட் அமைப்பில் முன்வைப்பேன். பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், உயர்கல்வித் துறையின் முன்னேற்றத்திற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்,” என்றார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற செனட் உறுப்பினர் சுகுமாரனுக்கு சக உறுப்பினர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.



