புதுக்கடை, ஏப். 3 –
புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் அருள் ரீகன் (40). மீனவரான இவர் கடல் தொழில் செய்து வருகிறார். நேற்று பெரிய வியாழன் ஆனதால் கிறிஸ்தவ ஆலயங்களில் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். இதனால் அன்றைய தினம் மாலையில் அருள் ரீகன் தனது குடும்பத்தாருடன் அந்த பகுதியில் உள்ள இனயம் லேனம்மாள் ஆலயத்தில் திருப்பலிக்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவில் வீடு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. உள்ளே சென்று பார்த்த போது படுக்கையறை பீரோவில் இருந்த செயின், மோதிரம் உள்ளிட்ட 7 பவுன் தங்க நகைகளை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அருள் ரீகன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி சம்பவ இடத்தை பார்வையிட்டு, வழக்கு பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகிறார்.


