நாகர்கோவில், ஏப்ரல் 27 –
தேர்தல் நேரங்களில் வாக்காளர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் கூறியதாவது: நடந்து முடிந்த தேர்தலில் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம் பலருக்கும் இருக்கிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு போக்குவரத்தில் போதுமான வசதிகளை செய்து கொடுத்திருந்தால், நிச்சயம் 10% வாக்குகள் கூடுதலாக அதிகரித்திருக்கும். இதை தேர்தல் ஆணையம் செய்ய தவறி விட்டது.
பேருந்து கட்டணம் அதிகம் கொடுத்தாலும், உரிய நேரத்தில் வாக்கு சாவடிக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்ட வாக்காளர்களும் இருக்க தான் செய்கிறார்கள். தேர்தல் நேரங்களில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் அந்தந்த பகுதி வாக்குசாவடிகளில் வாக்களிக்கும் விதத்தில் சிறப்பு பிரிவுகளை உருவாக்கியிருக்க வேண்டும்.
தமிழகத்தில் 85% வாக்குகள் பதிவாகி இருந்தாலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 75% மக்களே வாக்களித்துள்ளனர். பெரும்பாலும் இம்மாவட்ட மக்கள் வெளியூர்களில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் சென்னையிலிருந்தோ, கோவையிலிருந்தோ கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்று வாக்களிக்கப்பதில் பெரும் சிரமம் உள்ளது. சரியான போக்குவரத்து இல்லாது தான் இதற்கு முக்கிய காரணமாக தெரிகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கிட தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்” இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



