தஞ்சாவூர், ஏப்ரல் 13 –
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற கருத்து வேறுபாடுகளை மறந்து இருவரும் இணைந்து வந்துள்ளோம் என டி டி வி தினகரன் கூறினார்.
தஞ்சாவூர் ரெயிலடியில் நடந்த அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம் கூட்டத்தில் அ.ம.மு க பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் பேசியதாவது: இன்றைக்கு நாங்கள் ஒரே வேனில் ஒன்றாக நின்று பிரச்சாரம் செய்வதை பார்த்து சில பயத்தில் உச்சத்தில் உள்ளார்கள். நாங்கள் அண்ணன், தம்பி சண்டையிட்டது உண்மைதான். ஏதோ பிரச்சனை செய்தோம். சண்டையிட்டோம். தற்போது எல்லாம் ஒன்றாக வந்துள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் எங்கு சென்றாலும் எங்களை வரவேற்கிறார்கள். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நம் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஒன்றாக இணைந்து விட்டனர். நாங்கள் திமுக என்கிற தீய சக்தியை ஆட்சியில் இருந்து அகற்ற கருத்து வேறுபாடுகள் மறந்து வந்துள்ளோம். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் ஆட்சி, அண்ணன் எடப்பாடி உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியாக நாங்கள் இணைந்து உள்ளோம்.
டெல்டா, தி.மு.க.வின் கோட்டை என்கிறார்கள். இது ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்தது. இடையில் நாங்கள் கோட்டை விட்டுட்டோம். இப்போது உறுதியாக இதை ஜெயலலிதாவின் கோட்டை என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும். காரணம், ஜெயலலிதா காவிரி பிரச்சினையில் எப்படி எல்லாம் போராடினார்கள். காவேரி தீர்ப்பை பெற எவ்வளவு போராட்டம் செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அதேபோல அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது நமது டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக உருவாக்கினார். வைரமே கிடைத்தாலும் எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் விவசாயம் தான் செய்ய வேண்டும் என்ற நமது பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அன்றைக்கு இந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டதால் தான் இங்கே நமது விவசாயிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
எப்போதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்ததோ அப்போதெல்லாம் தஞ்சை பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் கிடைத்திருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தமிழ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 8வது உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார்.
பிரதமர் மோடி முதன்முதலாக அறிவித்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தஞ்சாவூர் இருந்ததற்கு ஜெயலலிதா தான் காரணம். இதன் மூலம் ரூபாய் 1,000 கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் நான்கரை ஆண்டு கால ஆட்சியில் பல சாதனைகள் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இன்றைக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் என்கிறார்கள். அவர்கள் உல்டாகாரர்கள் தான். இந்த முறை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.



