நாகர்கோவில், அக்டோபர் 13 –
நாகர்கோவில் ஓடும் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் மனுல் மேரி ஜான். இவரது மனைவி ஷீஜா (45). சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் நாகர்கோவில் எஸ். எல்.பி.பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஷீஜா தனது ஹேண்ட் பேக்கில் 1.40 லட்சம் பணம் வைத்து இருந்தார் பஸ் நிலையத்தில் இறங்கும்போது ஹேண்ட் பேக்கில் இருந்த பணத்தை காணவில்லை. இடைப்பட்ட சிறிது தூரத்திலேயே பணத்தை மர்ம நர்கள் திருடி சென்றனர்.
இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் ஷீஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்.ஐ. கீதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஷீஜாவும் அவரது கணவரும் பஸ் ஏறிய இடத்தில் இருந்து இறங்கிய இடம் வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரு பஸ் நிலையங்கள் உள்ளன.
இரு பஸ் நிறுத்தங்களுமே நகரின் மையப்பகுதியில் தான் அமைந்துள்ளன. ஒரு பஸ் நிறுத்தம் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பஸ் நிறுத்தம் ஆகும். மற்றொரு பஸ் நிறுத்தம் டிஸ்லரி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் நிறுத்தம் ஆகும். இந்த பகுதியில் தான் பணத்தை திருடி செய்தவர்கள் இறங்கி இருக்க வேண்டும். மேலும் ஸ்டேட் பேங்க் பஸ் நிறுத்தம் அருகே வேகத்தடையை கடக்கும் போது பெண் ஒருவரும் அவசரமாக இறங்கி உள்ளார். எனவே இதன் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவிலில் பஸ்ஸில் ரூ.1.40 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


