தக்கலை, ஜன. 5 –
குமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள மேட்டுக்கடையில் சில காலங்கள் வாழ்ந்து, அற்புதங்களும் அதிசயங்களும் செய்து உயிரோடு சமாதியானார் என நம்பப்படும் மாமேதை ஷெய்கு பீர்முகம்மது சாகிபு ஒலியில்லாவின் ஆண்டு பெருவிழா கடந்த டிச.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றிருந்து தொடர்ந்து நடந்து வருகின்ற விழாவில் மவுலிது பாடுதல், மார்க்கப் பேருரைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இவ் விழாவின் மிக முக்கிய நிகழ்வாக இறைவனை புகழ்ந்து பீரப்பா எழுதி பாடிய 18 – ஆயிரம் பாடல்களின் தொகுப்பாக வெளிவந்த 23- நூல்களில் ஒன்றான ஞானப்புகழ்ச்சி பாடலை பாடும் நிகழ்ச்சி நேற்று இரவு 9 மணிக்கு தர்காவில் வைத்து தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் கல்குளம் தாசில்தார் சுனில்குமார், பள்ளி விழா குழு உறுப்பினர்களான ஜெகபர் சாதிக், அப்துல் நாசர், அப்துல் கபூர், அப்துல் கமால், அபுதாகீர், ஹல்லாஜ், கமாலுதீன், முபாரக் அலி மற்றும் அஞ்சு வன்னம் பீர்முகமதியா முஸ்லீம் அசோசியேஷன் முன்னாள் நிர்வாகிகள், ஜமாத் பெரியவர்கள், பெண்கள், சிறுவர்கள், என திரளானோர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று 4-ம் தேதி அதிகாலை வரை தொடர்ச்சியாக நடந்த பாடல் பாடும் நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 – மணிக்கு பிரமாண்ட நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இது போல் ஜன.6-ல் மூன்றாம் சியாறத் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இவ்விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் வருவாய்துறை, வக்ஃபு வாரியம் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்தனர்.



