திருவட்டாறு, ஜூன் 18 –
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2022 ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால், அதை கணக்கில் கொண்டு ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூன் 22ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
108 வைணவத் திருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பெற்ற திருத்தலமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துக்குப்பின்னர் கோவிலில் சாமிதரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து வருகிறது.
வருஷாபிஷேகத்தையொட்டி ஜூன் 21ம் தேதி மாலை சுத்தி கலச பூஜை நடக்கிறது. ஜூன் 22ம் தேதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பை தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சிறப்பு ஸ்ரீபலி எழுந்தருளல் ஆகியன நடக்கிறது. தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது.
பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது. மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.



