நாகர்கோவில், டிசம்பர் 6 –
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (6ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்திலும் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி ஆகிய 5 துணை போலீஸ் சரகங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் சிறப்பு ரோந்து பணிகள் நாளை (7ம் தேதி) இரவு வரை நீடிக்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடலோர பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்படுகிறது. அருள்வாய்மொழி, குளச்சல், தேங்காய் பட்டணம், அஞ்சு கிராமம், களியக்காவிளை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள், ஒன்றிய, மாநில அரசு அலுவலகங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள், பார்சல்கள் சோதனை செய்ய செய்யப்படுகிறது.
இது குறித்து எஸ்.பி. ஸ்டாலின் கூறுகையில்: பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்படவில்லை. மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து லாட்ஜ்களிலும் போலீசார் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் கன்னியாகுமரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.



