நாகர்கோவில், செப்டம்பர் 19 –
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் அழகுமீனா இன்று காலை தொடங்கி வைத்தார். தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தீபாவளிக்காக சிறப்பு விற்பனையை குமரி மாவட்ட நிறுவனம் தொடங்கி உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் வளாகத்தில் செயல்படும் கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இன்று காலை நடைபெற்றது.
கலெக்டர் அழகுமீனா தலைமை வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவர் டாக்டர் விஜயலட்சுமி மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் கலெக்டர் அழகு மீனா கூறியதாவது: கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைமுறைக்கு வந்துள்ளது. தீபாவளி விற்பனைக்காக பல்வேறு புதிய ரக ஆடைகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது திருநெல்வேலி மண்டலத்தில் 10 கோடிக்கு விற்பனையானது. இந்த ஆண்டு ரூ.12 கோடிக்கு மண்டல அளவில் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் 5 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றார். கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் பத்மராஜ் தலைமையில் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


