தென்தாமரைகுளம், மே 22 –
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா வருகிற ஜூன் 1ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று வெள்ளிகிழமை அதிகாலை 05.30 மணி அளவில் கொடி ஏற்றுதல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குரு பையன் காமராஜ் தலைமை தாங்கினார். குருமார்கள் பால் பையன், பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குரு பையன் ராஜா கொடியேற்றி வைத்தார்.
பின்னர் பணிவிடையும், தர்மங்களும், வாகன பவனியும் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு அன்னதர்மம் நடைபெற்றது. மாலையில் பணிவிடையும் இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பணிவிடையை குருமார்கள் பையன்ஸ்ரீராம், பையன் சிவராஜ், பையன் பொன்ராஜ், ஸ்ரீராம பையன் ஆகியோர் செய்தனர். விழாவின் இரண்டாம் நாளான நாளை முதல் 23ம் தேதி 7ம் நாளான 28ம் தேதி வரை தினமும் பணிவிடையும், அன்னதர்மமும், வாகன பவனியும் நடைபெறுகிறது.
8ம் நாள் விழாவான 29ம் தேதி அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி சாமிதோப்பு முத்திரி கிணறு சமீபம் கலி வேட்டையாடுதல் நிகழ்வு நடக்கிறது. அதன் பிறகு அய்யா குதிரை வாகனத்தில் செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக சாமிதோப்பு வந்தடைகிறார். 30ம் தேதி அய்யா அனுமார் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் 31ம் தேதி இரவு 12 மணி அளவில் அய்யா இந்திர விமானம் வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவின் 11ம் நாளான ஜூன் 1ம் தேதி பகல் 12 மணிக்கு அய்யா பல்லாக்கில் பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தலைமைபதி நிரவாகிகள் செய்து வருகின்றனர்.



