மார்த்தாண்டம், ஜூலை 17 –
குமரி மாவட்டத்தின் 2-வது பெரிய நகரப் பகுதி மார்த்தாண்டம் ஆகும். இந்த நகரின் தேசிய நெடுஞ்சாலையோரம் குழித்துறை அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கிள்ளியூர், விளவங்கோடு தொகுதிகளுக்குட்பட்ட பொது மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையின் நுழைவு வாயில் பகுதியில் சாலையோரம் போக்குவரத்து மற்றும் மக்கள் நடந்து செல்வதற்கு இடையூறு செய்யும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்பட்டது. இது குறித்து பொது மக்கள் புகார் அளித்து அப்போதைய கலெக்டர் அழகுமீனா மற்றும் நெடுஞ்சாலை துறையால் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
தற்போது குழித்துறை நகராட்சி நிர்வாகத்தின் ஆசியுடன் மீண்டும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சரியான அனுமதி இல்லாமல் சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் உள்ள கடைகளை நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.



