தஞ்சாவூர், ஜூலை 6 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் பணி புரியப்பட்டுள்ளனரா?என 175 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை தொழிலாளர் ஆணையர் ஆணையின்படியும் திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர், இணை ஆணையர் ஆகியோரின் அறிவுரைகளின் படியும் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னி ட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமை தொழிலாளர்கள் பணி அமைக்கப்பட்டுள்ளனரா? என தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக் கோட்டை, பாபநாசம் பகுதிகளில் உள்ள 175 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 14 வயது நிறைவடைந்த, ஆனால் 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரை அபாயகரமான அனைத்து வகையான தொழில்களிலும் பணி அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட விதிகளை மீறும் பட்சத்தில் குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் வேலை அளிப்பவருக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் யாரும் பணி புரிவது கண்டறியப்பட்டால் சைல்ட் ஹெல்ப்லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ அல்லது தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அல்லது தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம் ) அலுவலக தொலை பேசி எண் 04362-264886 தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.


