சேலம், ஜூலை 14 –
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்திடவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அந்த மனுக்கள் மீண்டும் மீண்டும் வராத வகையில் மனுக்கள் மீது உரிய தீர்வு வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்று, வேலைவாய்ப்பு, வங்கி கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதி உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகளை கேட்டு 434 மனுக்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் மனுக்களை வழங்கும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்தப்பட்டு அதில் 30 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்று திறனாளிகளுக்கு ரூபாய் 3000 மதிப்பில் காதொலிக்கருவிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பீட்டில் பேட்டரியில் இயங்கும் சக்கர நாற்காலிகள் என மொத்தம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் வழங்கினார்.



