நாகர்கோவில், மே 25 –
நாகர்கோவிலை அடுத்த கோவில் விளையில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் பதுக்கப்பட்டு இருந்த சுமார் 5 டன் ரேஷன் அரிசி, கோதுமை மூடைகளை குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் கைப்பற்றினார். இவை அனைத்தும் நுகர் பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மூடைகள் ஆகும்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் சகாதேவன் (52), சரலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), மூவேந்தர் நகரை சேர்ந்த மோகன் (54) ஆகிய 3 பேரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடந்த விசாரணையில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் நுகர்வோர் வாணிப கழக குடோனில் பணியாற்றிய இரண்டு முக்கிய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
விசாரணை நடத்திய போலீசார் நேற்று முன்தினம் ஜூனியர் குவாலிட்டி ஆய்வாளர் ரமேஷ், ஜூனியர் அசிஸ்டன்ட் (பாயின்ட் கிளார்க்) செந்தில் குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இதே போல் நேற்று நுகர்வோர் வாணிப கழக குடோன் காவலாளிகளில் ஒருவரான பாபு என்பவரையும் கைது செய்தனர்.
இதுவரை இந்த சம்பவத்தில் 3 வியாபாரிகள், நுகர்வோர் கழக குடோனின் பணியற்றும் 2 அதிகாரிகள், ஒரு காவலர் என ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கைதாகி உள்ள அதிகாரிகள் ரமேஷ், செந்தில்குமார் ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நுகர்வோர் வாணிப கழக மேலாளர் பரிந்துரையின் பெயரில் இயக்குனர் பிறப்பித்துள்ளார். போலீஸ் விசாரணையில் கைப்பற்றப்பட்ட அரிசி, கோதுமை மூடைகள் நாகர்கோவில் அருகே உள்ள பெரிய காடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியவை என தெரிய வந்தது.
இந்த கடையின் பெயரில் கூடுதலாக அரிசி மூடைகள் கோதுமை மூடைகளை ஒதுக்கீடு செய்து பின்னர் அவற்றை தென்னந் தோப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


