மார்த்தாண்டம், மார்ச் 25 –
தமிழக கேரளம் எல்லை பகுதி கருமாரூர் பகுதியை சேர்ந்தவர் ஷிபின். அதே பகுதியை சேர்ந்த ஜித்து என்ற சுமன் (32) மற்றும் ராகுல் என்ற ராஜேஷ் குமார் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கடந்த 24.12.2016 அன்று இரவு பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது ஷிபின் ஒரு மது பாட்டிலை எடுத்து மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஜித்து மற்றும் ராகுல் ஆகியோர் அருகில் கிடந்த கம்பால் ஷிபினை சரமாரியாக தாக்கினார். அதில் அவர் உயிரிழந்தார். உடலை அந்த பகுதியில் போட்டு விட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இது சம்பந்தமாக குழித்துறை கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் ஜித்து கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். இதை அடுத்து அவரைப் பிடிக்கும்படி குழித்துறை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி மார்த்தாண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் உத்தரவின் பேரில் பளுகல் போலீசார் தனிப்படை அமைத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஜித்து பதுங்கி இருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து போலீசார் இரவில் அந்த வீட்டை சுற்றி வளைத்து ஜித்துவை அதிரடியாக கைது செய்தனர்.



