மார்த்தாண்டம், பிப். 10 –
கொல்லங்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரபலமான தூக்க நேர்ச்சை திருவிழா மார்ச் மாசம் 13-ம் தேதி துவங்கி 22ம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் தூக்க நேர்ச்சை நடைபெறும் கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் இந்த மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலஸ்தான கோவிலில் வரும் 19ஆம் தேதி காலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. அதே நாள் திருவிழா கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5 மணி முதல் பிராசாதப்பரிகாரம், ஆசாரிய வரணம், கணபதி பூஜை, ரக் ஷோகன ஹோமம், வாஸ்து ஹோமம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடக்கிறது.
20ஆம் தேதி காலை மூலஸ்தான கோவிலில் வழக்கமான பூஜைகள் முடிந்து, மாலை 5:30 மணியளவில் அம்மன் மூலக் கோவிலில் இருந்து எழுந்தருளி இரவு திருவிழா கோவிலை வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து இரவு பூஜை நடக்கிறது. 21ஆம் தேதி திருவிழா கோவிலில் காலை முதல் மதியம் வரை முக்கிய பூஜை நடக்கிறது.
22ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், தீபாராதனை, கலசாபிஷேகம், பூஜைகள் முடிந்து தேவஸ்தான தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் நாயர் தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


