நாகர்கோவில், ஜூன் 19 –
தமிழகத்தில் நேற்று 40க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் குமரி மாவட்டத்தில் தேரூரில் அமைந்துள்ள நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மதியம் 12:30 மணியளவில் இருந்து சுமார் 6 மணி நேரம் சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நுழைந்ததும் அங்கிருந்தவர்கள் தங்கள் கைகளில் இருந்த பணத்தை ஆங்காங்கே மறைத்தனர். போலீஸார் ஒவ்வொருவரையும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அலுவலகத்தில் தீ விபத்தின் போது பயன்படுத்தும் மணல் வாளியில் ரூ.19,500 இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் ஒவ்வொரு அறையிலும் சோதனை செய்தபோது பல்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்த பணம் சிக்கியது. அந்த வகையில் மொத்தம் 51,400 ரூபாய் கண்டெடுக்கப்பட்டது. இந்த பணத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் உரிமை கோரவில்லை. இதனால் கணக்கில் வராத பணம் ரூ.51,400-ஐ போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தற்போது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருந்த அலுவலர்களின் ஜி பே பரிவர்த்தனைகளையும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆய்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


