நாகர்கோவில், ஜூன் 29 –
தேசிய நெடுஞ்சாலையாக இருந்த கன்னியாகுமரி – களியக்காவிளை சாலை தற்பொழுது மாநில நெடுஞ்சாலையாக மாறிவிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்ட பொறியாளருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமர்ப்பித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: குமரியின் முக்கிய சாலையாக கன்னியாகுமரி – களியக்காவிளை தேசிய சாலை உள்ளது. 2024 ஆம் ஆண்டு இந்த சாலையை செப்பனிட நிதி கோரிய பொழுது 4 வழி சாலை பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இந்த சாலை மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாறும் என மத்திய அரசு கூறி நிதி ஒதுக்க மறுத்தது.
ஆனால் போராடி 2024 ஆம் ஆண்டு ரூபாய் 14.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த பணிகள் மாநில அரசு வாயிலாக, மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெற்றது. மொத்தம் பழுதடைந்த 12 கிலோமீட்டர் தூரம் ஒப்பந்தகாரர் மூலம் செப்பனிடப்பட்டது. தற்பொழுது இந்த சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. ஆதலால் இந்த பகுதிகளில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பழுதுகள் குறைபாடு பொறுப்பு காலத்திற்குள் வருவதால் அந்த ஒப்பந்தகாரர் வாயிலாக பழுதுகளை செப்பனிட ஆவன செய்ய வேண்டும்.
அதுபோன்று நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் தோட்டியோடு – திங்கள் நகர் பிரதான சாலை துண்டிக்கப்பட்டு, நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் பேயன்குழி சந்திப்பிலிருந்து இரட்டை கரை சானல் வழியாக சென்று வடக்கு நுள்ளிவிளையில் புதிய 4 வழி சாலையை சந்திக்கிறது. அதுபோன்று நாகர்கோவிலில் இருந்து செல்லும் வாகனங்கள் சானலின் மறுபுறமாக உள்ள சாலையில் செல்கின்றன. ஆனால் இந்த சாலை மிகவும் பழுதடைந்து, வாகனங்கள் ஆபத்தான நிலையில் பயணிக்கின்றன. மழை காலங்களில் மண் சரிவு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் சாலையை முழுமையாக செப்பனிட்டு, நிரந்தரமாக தார், கான்க்ரீட் சாலை அமைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.


