ஈரோடு, ஆக. 5 –
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைகாடு பகுதியைச் சேர்ந்தவர் பானு (27). இவர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த பரிதா, அவரது மகன் அன்சாரி மற்றும் அவருடன் வந்தவர்கள் அத்துமீறி எனது வீட்டிற்குள் நுழைந்தனர்.
முன் விரோதம் காரணமாக சமையல் அறையில் இருந்த என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, தரதரவென வெளியே இழுத்து வந்து கடுமையாகத் தாக்கினர். மேலும் இரும்பு பைப் போன்ற ஆயுதங்களால் என்னை அடித்ததுடன், சுவற்றிலும் மோதச் செய்து கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் மயக்கமடைந்த நான், ஈரோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பினேன்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தேன். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் 7 நாட்கள் ஆகியும் என்னை தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட என்னை தொடர்பு கொண்டு என்னை வீட்டை காலி செய்யுமாறு மிரட்டுகிறார்கள்.
எனவே என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் மல்க பானு புகார் மனுவில் கூறி உள்ளார்.



