ஈரோடு, ஏப். 29 –
ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளி ஈரோடு பெரிய அக்ரகாரம் ரோட்டில் உள்ளது. இந்த பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளதாவது: அரசு இசைப்பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 வயதுக்கு மேல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தவில், நாதசுரம் மற்றும் தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இசைப்பள்ளியில் பயலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளி ஊர்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.
மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வு இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் ஓதுவாராகப் பணிபுரியவும், வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. திருகோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
ஆகவே கலை ஆர்வமுள்ள மாணவ மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ மாணவியர் சேர்க்கை வருகிற 2ந் தேதி முதல் தொடங்குகிறது. விபரங்களுக்கு தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, பி.பெ.அக்ரஹாரம், பவானி ரோடு, ஈரோடு – 638 001 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


