திருவட்டாறு, மார்ச் 21 –
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. முன்னதாக நாளை மறுநாள் 23ம் தேதி மாலை பள்ளிக்குழி விளையில் இருந்து கொடிக்கயிறு ஊர்வலம் நடக்கிறது.
பங்குனித்திருவிழாவின் முதல் நாளான நாளான 24ந் தேதி காலை 5 மணிக்கு ஹரி நாம கீர்த்தனம், 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், காலை 8.45லிருந்து 9.45 மணிக்குள் பஞ்சவாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜையுடன் கருட இலச்சினை பொறிக்கப்பட்ட திருக்கொடியேற்று, மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடக்கிறது.
5ம் நாள் (மார்ச் 28ந் தேதி) மாலை 6.30 மணிக்கு லட்ச தீபம், இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்று மற்றும் 5, 6, 7 திருவிழா நாள்களில் காலை 11 மணிக்கு சிறப்பு உற்சவ பலி தரிசனம், 9ம் நாள் (ஏப்ரல் 1ம் தேதி) இரவு 9.30 மணிக்கு தளியலில் சுவாமி பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10ம் நாள் (ஏப். 2ந் தேதி) மாலை 5.30 மணிக்கு கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு மூவாற்றுமுகம் ஆற்றுக்கு எழுந்தருளல் ஆகியன நடக்கிறது.
முன்னதாக மார்ச் 23ம் தேதியான நாளை மறுநாள் மாலை 4.30 மணிக்கு ஆற்றூர் அருகே பள்ளிகுழிவிளை பள்ளி கொண்ட காவு கோவிலிருந்து கொடிக் கயிறு மற்றும் சீர்வரிசை பொருட்களை, முத்துக் குடை, தாலப்பொலியுடன் கழுவன் திட்டை, சந்தை, தபால் நிலைய சந்திப்பு வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று கோவிலில் சமர்பிக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.


