திருப்பூர், மே 28 –
தமிழ்நாட்டைப் பார்த்து ஆட்சி செய்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் நடக்கும் குதிரை பேரத்தை பார்த்து சிரிக்கிறார்கள். இதற்கு முறையான சிபிஐ விசாரணை தேவை என திருப்பூரில் இந்து முன்னேற்ற கழக தலைவர் கோபிநாத் பேட்டி.
இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்: ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்ற மாமேதைகள் ஆட்சி செய்தார்கள். தமிழகத்தை பார்த்து இந்தியா முழுவதும் ஆட்சி செய்யம் நிலை நீடித்த நிலையில் இப்போது இந்தியா முழுவதும் தமிழ்நாட்டை பார்த்து சிரிக்கும் நிலை உள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறார்கள். முழுக்க முழுக்க குதிரை பேரம் நடைபெறுகிறது. சாமானியர்கள் கட்டிய வரிப்பணம் மூலமே தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று உடனடியாக ராஜினாமா செய்வது மக்களை முட்டாளாக்கும் செயல். இது குறித்து உடனடியாக சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும்.
படத்தில் நடிக்கும் போது விஜய். ஆனால் முதலமைச்சர் ஆன பின் ஜோசப் விஜய் என சொல்கிறார். அது மகிழ்ச்சி தான் என்றாலும் தமிழக மக்கள் எவ்வளவு முட்டாள்களாக உள்ளனர் என்பதற்கு சான்று. திமுகவிற்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது. கூட்டணியில் இருந்த கட்சிகள் கொள்கையை நடுத்தெருவில் விட்டு அனாதையாக திமுகவை விட்டு தவெகவிற்கு சென்றது கண்டிக்கத்தக்கது.
விரைவில் மாற்றம் வரும் இது நிரந்தரம் கிடையாது. காங்கிரஸ் நின்ற இடத்தில் இருந்து அந்தர் பல்டி அடிப்பார்கள். இது தேசிய அரசியலில் பார்த்ததுதான். இனி வரும் தேர்தலில் இளைஞர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். பணத்திற்காகவோ, சினிமாவிற்காகவோ மாற்றி வாக்களிப்பது இந்தியாவை படுகுழியில் வீழ்த்திவிடும். படத்தில் வருவது போல ஆட்சி செய்ய முடியாது. என்ன தவறு என்றே தெரியாமல் அதிகாரிகளை நீக்கம் செய்வது சரியில்லை. சினிமா போல காட்சிகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் கருத்து.
விஜய் வந்ததில் எங்களுக்கு வருத்தம் இல்லை. ஆனால் குதிரை பேரம் இல்லாமல் நேர்மையான ஆட்சி செய்ய வேண்டும் என்பதே எங்கள் நிலை. சரியான முறையில் ஆட்சி செய்தால் வரவேற்போம். தவறு செய்தால் விமர்சிப்போம் கண்டிப்போம் என தெரிவித்தார்.



