சேலம், ஜுலை 17 –
போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் இன்று சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் முன்னிலையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் 1695 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாடு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். சென்னையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் புதிய குடும்ப அட்டைகளை வழங்கியதன் தொடர்ச்சியாக பிற மாவட்டங்களில் உள்ள பயனாளர்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டைகளை வழங்கிட உத்தரவிட்டார்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களில் 10,93,850 அரிசி பெறும் குடும்ப அட்டைகள், 24,446 சர்க்கரை குடும்ப அட்டைகள் மற்றும் 1956 பண்டகம் இல்லா குடும்ப அட்டைகள் என மொத்தம் 11,20,252 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
மேலும் சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 1,315 முழுநேரம் மற்றும் 462 பகுதி நேரம் என மொத்தம் 1777 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளின் மூலம் பொது மக்களுக்கு தேவையான அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம்பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த ஜூலை 2026 -ல் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20,200 மெ.டன் அரிசி 1,663 மெ. டன் சர்க்கரை, 2014 மெ.டன் கோதுமை, 98 மெ. டன் துவரம் பருப்பு, 9,89,000 பாக்கெட்டுகள் பாமாயில், 180 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் வட்டத்தில் 49, எடப்பாடி வட்டத்தில் 118, கெங்கவல்லி வட்டத்தில் 54, காடையாம்பட்டி வட்டத்தில் 54, மேட்டூர் வட்டத்தில் 119, ஓமலூர் வட்டத்தில் 101, பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்தில் 135, சேலம் வடக்கு வட்டத்தில் 244, சேலம் தெற்கு வட்டத்தில் 167, சேலம் மேற்கு வட்டத்தில் 277, சங்ககிரி வட்டத்தில் 102, தலைவாசல் வட்டத்தில் 28, வாழப்பாடி வட்டத்தில் 220, மற்றும் ஏற்காடு வட்டத்தில் 27 என மொத்தம் 1695 பைனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மக்களின் அனைத்து தரப்பு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதே அரசின் முதற்கட்ட பணியாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வரின் இத்தகைய நலத்திட்டங்களை பொதுமக்கள் பெற்று பயனடைய வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் கூறினார்.



