ஈரோடு, ஜூன் 13 –
அந்தியூரை அடுத்த பர்கூர் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வேகமாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் பூண்டு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த பூண்டு மூட்டைகளை இறக்கி போலீஸார் சோதனையிட்ட போது பூண்டு மூட்டைகளுக்கு அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கோவை போத்தனூர் பஜனை கோயில் வீதியைச் சேர்ந்த அப்துல் ரகீம் மகன் நெளகத் (35), குனியமுத்தூரைச் சேர்ந்த அபு சலீம் மகன் முபாரக் அலி (47) ஆகியோரிடம் விசாரிக்கையில், கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கோவைக்கு விற்பனை செய்ய இந்த புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரியவந்தது. இதனால் சரக்கு வாகனத்தையும், 70 மூட்டைகளில் இருந்த 440 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.


