ஈரோடு, ஜூன் 1 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தனிப்பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தெரு விளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 255 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்து மீட்கப்பட்ட துளசி மணிகண்டனுக்கு மறுவாழ்வு நிவாரணத் தொகையாக ரூ.55,000 வழங்கினார்.
மேலும், குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்து மீட்கப்பட்ட மாணவன் துளசி மணிகண்டன் தற்போது இளங்கலை பொறியியல் பட்டம் இரண்டாம் ஆண்டு பயின்று வருவதை அறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவருக்கு புத்தகத்தினை பரிசாக வழங்கி வாழ்வில் முன்னேற கல்வியின் அவசியம் குறித்து அறிவுரைகளை வழங்கி வாழ்க்கையில் மேலும் முன்னேற தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து வழங்கப்பட்ட கோரிக்கை மனுவின் மீது உடனடி தீர்வாக லக்காபுரம் பகுதியை சேர்ந்த முனிச்சாமி என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.9,300 மதிப்பிலான மூன்று சக்கர மிதிவண்டியினை வழங்கினார்.



