நாகர்கோவில், ஏப். 11 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கிற்கு தகுதி உள்ள 8,552 வாக்காளர்கள் அதாவது 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பொருட்டு தபால் வாக்கிற்கான விருப்பத்தினை தெரிவிக்க படிவம் 12D மேற்படி வாக்காளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களால் சேகரிப்பட்டுள்ளது.
மேற்படி படிவம் 12D-யின் வழியாக வீடுகளில் வாக்கு பதிவு மேற்கொள்ள விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொள்ளும் பொருட்டு 149 மண்டல அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் அடங்கிய குழு மாவட்ட தேர்தல் அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குழுவினர் நாளை 12 ம் தேதி முதல் 14 ம் தேதி வரை காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மண்டல அலுவலர்கள், நுண்பார்வையாளர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள், அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர் அடங்கிய குழுவினர் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு பதிவு மேற்கொண்டு பெறப்பட்ட வாக்குப்பதிவு சீட்டுகளை முத்திரையிட்டு தேர்தல் நடத்தும் அலுவலரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்கள் போதுமான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அழகுமீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தக்கலையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் தபால் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணியனை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடைபெற்ற ஆய்வில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நடத்தும் அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ஈஸ்வரநாதன், அச்சகத்தார், பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



