ராமநாதபுரம், பிப். 25 –
தமிழக பட்டதாரி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயலாளர் முருகேசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகிற மார்ச் 11 முதல் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 70 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் அரசு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வுப் பணிக்கு துறை அலுவலர், வழித்தட அலுவலர், நிற்கும் படை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர் என தனித்தனியான பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட தேர்வுப்பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது கர்ப்பிணி பெண் ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் தொடர் மருத்துவம் செய்து வரும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தேர்வுப்பணியிலிருந்து விலக்களிக்க வேண்டும்.
மேலும் சில தேர்வு மையங்களுக்கு பேருந்து வசதி கிடையாது. எனவே, பெண் ஆசிரியர்களை தேர்வுப்பணிக்கு நியமிக்கும் போது அவர்கள் பணியுரியும் பள்ளி அருகே உள்ள தேர்வு மையத்தில் பணியமர்த்த வேண்டும். பேருந்து வசதி இல்லாத தேர்வு மையங்களுக்கு பெண் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டாம்.
ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி நகரிலுள்ள சில தனியார் பள்ளிகளிலுள்ள தேர்வு மையங்களில் தேர்வு பணி செய்ய,வேறு வட்டாரங்களில் பணிபுரியும் சில ஆண் ஆசிரியர்கள், தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி பணி நியமன ஆணை பெற்று, அந்த தனியார் தேர்வு மையங்களில் தேர்வு பணி செய்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர் ஆய்வு செய்து, நகரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது, பெண் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து நியமிக்க வேண்டும்.
துறை அலுவலர், வழித்தட அலுவலர் மற்றும் நிற்கும்படை அலுவலர் ஆகிய பணிக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் போது அந்தந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை, அந்தந்த வட்டாரங்களில் தேர்வுப்பணி நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



