நாகர்கோவில், மே 11 –
அஞ்சுகிராமம் அடுத்த அழகப்பபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்சன் செல்வராஜ் (66). தனியார் லாட்ஜ் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரமாக அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜார்ஜ் மேரி அக்கம்பக்கத்தில் தேடினார். வீட்டில் பின்புறம் உள்ள தோட்டங்களில் தேடியும் வில்சன் செல்வராஜை காணவில்லை.
பின்னர் அருகில் உள்ள மற்றொரு தோப்பில் சென்று தேடியபோது அங்குள்ள பின்வாசல் அருகே அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அருகில் சென்று பார்த்த போது, அறுந்து விழுந்த மின் கம்பியில் கால்வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்தில் வந்து மின் இணைப்பை துண்டித்தனர்.
பின்னர் வில்சன் செல்வராஜை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. விசாரணையில் மின் கம்பி அறுந்து, மின்கம்பியை மிதித்ததால் இறந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


