திருப்பூர், மார்ச் 03 –
திருப்பூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள பாரதி வித்யா பவன் (BVB) சீனியர் செகண்டரி பள்ளியில்,
ரோவர்ஸ் (Rovers) அமைப்பு மற்றும் பி.வி.பி பள்ளிகள் இணைந்து கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 01, ஆகிய 2 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் முதல் நாளில் பல்வேறு தடகளப் போட்டிகளும், இரண்டாவது நாளில் மாணவர்களின் வலிமை, ஒழுக்கம் மற்றும் பாரம்பரிய தற்காப்புக் கலைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளும் நடைபெற்றன. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விளையாட்டு போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியைத் திருப்பூர் மாவட்டக் கல்வி அதிகாரி எம். மணிமாறன் தொடங்கி வைத்தார். பி.வி.பி பள்ளிகளின் தலைவர் செல்வராஜ் மற்றும் தாளாளர் நளினி செல்வராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.
இதில் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மண்டல காசாக்ராண்ட் (Casagrand) நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் சரத்குமார் மற்றும் கோவை ஹூண்டாய் (Kovai Hyundai) நிறுவனத்தின் ஏ.ஜி.எம் சையத் முகமது ரியாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
மாவட்டக் கல்வி அதிகாரியால் தொடங்கி வைக்கப்பட்ட ஒலிம்பிக் ஜோதியை சுமந்து வந்த மாணவர்களான சுமஅபினவ் கிருஷ்ணா, கேஜஸ்வின், ஜி. தன்ஷிகா, கே. கீர்த்திகா, எஸ். அஸ்மத் ஹசனா, பி. பகத், எஸ்.ஏ. தரணி தரன், எம். தஸ்னீம், டி. லக்ஷனா, எஸ். அனீஷ், ஜி.சி. மோகித் வர்ஷன் மற்றும் எஸ். நக்ஷத்ரா ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். ஒற்றுமை, விளையாட்டு உணர்வு மற்றும் சிறந்து விளங்குதலைக் குறிக்கும் வகையில், பள்ளியின் தலைவரின் புதல்வி நக்ஷத்ரா மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் ஓட்டப்பந்தயம் கராத்தே சிலம்பம் ஆகிய போட்டியில் மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மலேசியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச இறுதிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.



