தேனி, மே 18 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (18.05.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 227 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, ஆண்டிபட்டி வட்டம் சித்தையன்கவுண்டன்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவர் கடந்த 30.04.2026 அன்று ஏற்பட்ட இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது வாரிசுதாரருக்கு பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.4,00,000/- பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் இவர்களது 2 கறவைமாடுகளும் இடிமின்னல் தாக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, பேரிடர் நிவாரணத்தொகையாக ரூ.75,000/- பெறுவதற்கான ஆணையினையும்
ஜானகி என்பவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



