இரணியல், பிப். 12 –
இரணியல் அருகே உள்ள ஆளூர் அடுத்த பெரும் செல்வவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (32). பெயிண்டர் ஆக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஜெனிஷா என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக செல்வகுமார் மது போதைக்கு அடிமையான நிலையில் ஒழுங்காக வேலைக்கு போகவில்லை என்று தெரிகிறது. மேலும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய நிலையில் கடன் தவணை செலுத்த முடியாமல் அவதி பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை மனைவி மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கண்டித்து வந்தனர்.
இந்த நிலையில் மனவருத்தம் காரணமாக நேற்று மாலை ஏதோ விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்த அவரை மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவர் மனைவி ஜெனிஷா அளித்த புகாரில் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேவியர் பிராங்க்ளின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


