தேனி, செப். 3 –
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் மேகமலை – மணலார் பகுதியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் அதிகமாக கர்பங்கள் நிகழும் 24 வட்டாரங்களில் தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் என். இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ. மகாராஜன (ஆண்டிபட்டி), கே.எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் நிகழும் 24 வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த வட்டாரங்களில் உள்ள மக்களுக்கு தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இத்திட்டம் தமிழ்நாட்டில் தேனி உட்பட 10 மாவட்டங்களில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 வட்டங்களில் 6 வட்டங்களில் வளரிளம் பருவத்தில் கர்ப்பங்கள் அதிகமாக நிகழ்வதால் இத்திட்டம் மேகமலையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 24 வட்டாரங்களில் ஒரு துணை சுகாதார மையத்திற்கு 5 கிராமங்கள் வீதம் 2320 கிராமங்களில் தெரு நாடகங்கள் நடைபெற உள்ளது.
பெண்கள் இளம்வயதில் திருமணம் செய்யும்போது, பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை தாங்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்காது. இதனால் குழந்தை மற்றும் தாய்க்கும் பாதிப்பு ஏற்படும். இதுதொடர்பாக சமூகநலத்துறையின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பிலும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கலைக்குழுவினர் மூலம் தெருநாடகங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கலைக்குழுவினர் மூலம் வளரிளம் பருவத்தினர் மற்றும் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இளம்வயது கர்ப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூக மாற்றுத்தை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு விகிதம் ஒரு இலட்சம் மகப்பேறு தாய்மார்களில் கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் 90 ஆகவும் 2022-2023 ஆம் ஆண்டில் 52 ஆகவும் 2023-2024 ஆம் ஆண்டில் 45.5 ஆகவும் 2024-2025 ஆம் ஆண்டில் 39.4 ஆகவும் குறைந்துள்ளது. மகப்பேறு குழந்தை இறப்பு விகிதம் 1000 குழந்தைகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டில் 10.4 ஆகவும் 2022-2023 ஆம் ஆண்டில் 10.2 ஆகவும் 2023-2024 ஆம் ஆண்டில் 8.2 ஆகவும், 2024-2025 ஆம் ஆண்டில் 7.7 ஆகவும் குறைந்துள்ளது. இதில் தேனி மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு விகிதமானது 43.3 ஆகவும் குழந்தை இறப்பு விகிதம் 9.4 ஆகவும் உள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை பூஜ்ஜிய விகிதமாக குறைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தேனி மாவட்டத்தில் அதிக வளரிளம் கர்ப்பங்கள் நிகழும் 6 வட்டங்களில் உள்ள 105 துணை சுகாதார நிலையங்களில், ஒரு துணை சுகாதார நிலையத்திற்கு 5 வீதம் 525 தெரு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மருத்துவ துறையில் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு வகையான சிறப்பு மருத்துவ திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்க காலை உணவுத்திட்டம், இல்லம் தேடிக்கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கல்வி மற்றும் மருத்துவத்துறையில் வளர்ச்சி அதிகமாக உள்ளது.
மருத்துவ நல்வாழ்வுத்துறையின் சுகாதார திட்டங்கள் சேவைகள் குறித்து தெரிந்து கொள்ள 104 என்ற எண்ணையும், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக இலவச 1098 என்ற எண்ணையும், மனநலம் மற்றும் தற்கொலை தடுப்பு தொடர்பான ஆலோசனைகள் பெற 14416 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் வளரிளம் பருவம் கர்ப்பத்தை தடுப்பதற்காக தெருநாடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் இன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மலைகிராமத்தை தேர்வு செய்தது மிகவும் சிறப்பானது.
தற்பொழுது மாணவர்கள் படிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசின் சார்பில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விழிப்புணர்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் செய்துவிட்டு படிக்கலாம் என்று சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், திருமணம் செய்தபிறகு நம் விருப்பப்படி தொடர்ச்சியாக படிக்க இயலாது.
சில சமூகபழக்கங்களால் கல்வி பயில்வது தடைபட கூடாது. கல்வி மிக மிக முக்கியமானது. உயர்பதவியில் உள்ள அனைத்து அலுவலர்களும் படித்து முன்னேறியவர்களே. பெற்றோர்கள் தவறவிட்ட கல்வியறிவை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும்.
தற்பொழுது மாணவர்கள் தங்கள் இலக்கை உறுதியாக நிர்ணயித்து அதனை அடைவதற்கு தேவையான முயற்சிகளை ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் பின்பற்றி வருகிறார்கள். மேலும் அரசின் சார்பிலும், நான் முதல்வன், கல்லூரிக்கனவு உள்ளிட்ட உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது மற்றும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி பயில்வதற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வாய்ப்புகளை பெற்றோர்கள் பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, அவர்களை சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக உருவாக்க வேண்டும். மேலும், குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகை திட்டத்தின் கீழ் முதல் தவணையாக தலா ரூ.6000/- வீதம் 2 பயனாளிகளுக்கும், , கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ பெட்டகம் 4 பயனாளிகளுக்கும், மருந்து பெட்டகம் 2 பயனாளிகளுக்கு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. சினேஹாப்ரியா, துணை இயக்குநர் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) விவேக் பரஸ்நாத் யாதவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஐ. மகாலட்சுமி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது, இணை இயக்குநர்கள் செந்தில்குமார் (ஆரம்ப சுகாதார நிலையங்கள்), சுரேஷ்குமார் (பயிற்சி), மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், உதவி இயக்குநர் (பேரூராட்சி) கிறிஸ்டோபர் தாஸ், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா தேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன், மாவட்ட நியமன அலுவலர் மரு. சசிதீபா, துணை காவல் கண்காணிப்பாளர் சுனில், வட்டார மருத்துவ அலுவலர் முருகன், செயல் அலுவலர் (ஹைவேவிஸ்) சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.



