நாகர்கோவில், ஜூன் 19 –
நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய கமிஷனராக ஐஸ்வர்யா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதை தொடர்ந்து அவர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் நாகர்கோவில் மாநகரம் முழுவதும் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.
வடசேரி பஸ் நிலையத்தில் அங்குள்ள கழிவறை வசதிகள் மற்றும் தூய்மை பணிகளை பார்வையிட்டார். பின்னர் வேப்பமூடு பூங்காவிற்கு சென்று ஆய்வு செய்து அங்கு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த குடிநீரை தானே குடித்து பார்த்து அதன் தரத்தை சோதித்தார். பொதுமக்களுக்கு எந்த நேரம் தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்றும் பூங்காவை தினமும் தூய்மையாக பராமரிக்க வேண்டும் என அங்கு இருந்த ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிலையில் கமிஷனர் இன்று 2 வது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோவில் வலம்புரி விளையில் உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கு சென்று அங்கு மலை போன்று குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை பார்வையிட்டார். பயோ- மைனிங் முறையில் அந்த பகுதியை உடனடியாக சீரமைக்க தேவையான அனைத்து விதிகளையும், நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின் அங்கு உள்ள உரமாக்கல் மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்பு சரலூர் சானல் கரை பகுதியில் தூய்மை பணியாளர்கள் வீடுகளில் மட்கும் குப்பை, மட்க்காத குப்பை என பிரித்து வாங்குவதை கண்காணித்தார். அப்போது மக்களிடம் தூய்மை பணியாளர்கள் முறையாக குப்பைகளை பிரித்து வாங்குகிறார்களா? என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். செம்ம குளத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட கமிஷனர் ஐஸ்வர்யா அந்த பணிகளை பருவ மழைக்கு முன்பாக விரைந்து முடிக்குமாறு அறிவித்தார். இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி பொறியாளர் ரகுராமன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.



