நாகர்கோவில், ஜூன் 18 –
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் மாபெரும் குமரி திருவிழா நிகழ்ச்சியானது வருகின்ற 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட 5 நாட்களும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் பல்வேறு கலை வடிவங்கள், திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வகயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் அயல்மாநில மற்றும் உள்மாநில கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பல்வேறு கலை வடிவங்களில் இந்த விழா நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள குமரி திருவிழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கலைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் குமரி திருவிழாவினை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாக குமரி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை இன்று மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் சிவபுகழ், கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் பட்டுசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



