தஞ்சாவூர், மே 22 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் சாஸ்த்ரா பல்கலைக்கழக கூட்ட அரங்கில் 10 வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளின் உயர்கல்வி மேற்கொள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி ஆசிரியர்களுக்கான வழிகாட்டு பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
இதில் அரசு பொது தேர்வு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி பயில எந்தெந்த துறை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டன. தொழில் பயிற்சி, பாலிடெக்னிக், பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் சேர்ந்து பயில்வதற்கான ஆலோசனை அந்தந்த துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களால் விளக்கப்பட்டது.
அரசு கல்வி நிறுவனத்தின் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பாட பிரிவுகள் சார்ந்தும் அவற்றிற்கான வேலை வாய்ப்புகள் சார்ந்தும் விரிவாக எடுத்துரைத்தனர். 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் 100 சதவீதம் சேர்வதற்கான முயற்சியாக இந்நிகழ்வு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேபி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மாதவன், சுந்தர், அரசு கல்வி நிறுவனத்தினை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.



