மார்த்தாண்டம், ஜூன் 15 –
களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியை சேர்ந்தவர் சுகுமாரன் மகன் சுரேஷ்குமார் (26). டிப்ளமோ படித்து விட்டு கேட்டரிங் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் நடந்த தனது நண்பர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக பைக்கில் சென்றார். பின்னர் விழா முடிந்ததும் பைக்கில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு சுமார் 11. 45 மணியளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வந்த போது பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கார்களை ஏற்றிக்கொண்டு நீண்ட நீளமான லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்தது. அப்போது சுரேஷ்குமார் லாரியை செல்ல முயன்ற போது, எதிர் திசையில் கொல்லத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த கார் மீது பைக் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சுரேஷ்குமார் கீழே விழுந்து லாரி அடியில் சிக்கிக்கொண்டார். அந்த நேரம் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சுரேஷ்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுரேஷ்குமார் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்தநாள் விழாவுக்கு சென்று விட்டு வந்த வாலிபர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



