நாகர்கோவில், அக். 22 –
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் தற்போது ஆறு மற்றும் குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர். தேங்காப்பட்டணம், குளச்சல் துறைமுக பகுதிகளில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் இருக்கிறார்கள்.
புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. விசைப்படகுகள் அனைத்தும் கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் வள்ளத்தில் மீன்பிடிப்பவர்கள் மட்டும் கடலுக்கு சென்றனர்.


