புதுக்கடை, செப். 15 –
புதுக்கடை அருகே குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (36). இவர் உதச்சிகோட்டை பகுதியில் மொத்தமாக புளி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவ தினம் இரவு இவர் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் கடை அருகில் உள்ள பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பிரபுவின் கடையில் தீப்பிடித்து எரிவதாக தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் கடையில் வைத்திருந்த புளி உள்ளிட்ட இதர பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 20 லட்சம் என்று தெரிய வருகிறது. இது குறித்து புதுக்கடை போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


