நாகர்கோவில், ஏப். 16 –
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் திறந்த வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கன்னியாகுமரி தொகுதிக்கும் உட்பட்ட லீபுரம், கல்லுவிளை, கல்லுவிளை காலனி, விஜயநாராயணபுரம், மெஞ்ஞானபுரம், கிருஷ்ணன் புதூர், ஆமணக்கன்விளை, வட்டக்கோட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் மகாதானபுரம் ரவுண்டானாவில் நிறைவடைந்தது.
அப்போது பி.டி.செல்வகுமார் பேசியதாவது: கன்னியாகுமரி தொகுதியில் தளவாய்சுந்தரம் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியாவின் முதன்மை அடையாளமாகவும், திருவிதாங்கூர் சமஸ்தானம் நன்கொடையாக தந்ததுமான இயற்கை எழில் சூழ்ந்த நரிக்குளத்தின் கரையோரங்களை வலுப்படுத்தி குளத்தைச் சுற்றிலும் நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்வதால் நரிக்குளத்தில் படகுதளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தைச் சுற்றிலும் மரங்கள் நட்டு சீரமைப்பதுடன், சுற்றுலாப்பயணிகள் வியக்கும் அளவுக்கு இவை அனைத்தும் முடித்துக் காட்டப்படும்.
மேலும், கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில், அதிமுக ஆட்சியமைந்த மூன்று மாதத்துக்குள் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மகாதானபுரம் காரியக்காரமடம் சந்தை பாதுகாப்பு அம்சங்கள், கழிப்பறை வசதி மற்றும் நவீன அங்காடி போன்று நவீனப்படுத்தப்படும் என பி.டி.செல்வகுமார் பேசினார்.
இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், லீபுரம் ஊராட்சி அதிமுக பொறுப்பாளர் கே.லீன், மற்றும் நிர்வாகிகள் முத்துலிங்கம் நாகராஜன், கணேசன், மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



